Friday, September 21, 2012

ஸ்வர ராஜா  1

இளையராஜா அவர்களின் இசையின் ஊடாக அதில் ஊறி வளர்ந்த தலைமுறையை சேர்ந்தவன்  நான்.  என் வாழ்வின் கடினமான தருணங்களிளெல்லாம்  ராஜாவின் பாடல்கள் எனக்கு ஆறுதலும் தேறுதலும் தந்திருக்கிறது ( சுக ராகம் சோகந்தானே). என் வாழ்வில்  இன்றுவரை  மாறாத வெகு சில விசயங்களில் அவரின் இசையும் ஒன்று. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற  தருணங்களில் இளையராஜாவின் சில தெலுங்கு மொழி பாடல்களை கேட்க நேர்ந்தது. ஒரு நாள் மதிய உணவுக்குப்பின் மேற்கொள்ளும் வழக்கமான ஆழ்ந்த தூக்கத்திலிருந்து மிகப்பரிச்சயமான ஒரு பாடல் மனதை தட்டி எழுப்பிற்று. அது எமது  அறையிலிருந்த பிலிப்ஸ் ரேடியோவிலிருந்து ரேடியோ மிர்ச்சி பண்பலை வரிசையில்  ஒலி பரப்பான  "ஆனந்த ராகம் கேட்கும் நேரம்" என்ற பன்னீர்  புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல் தெலுங்கில். இளையராஜா ராம் கோபால் வர்மா  இயக்கிய "சிவா "  படத்திற்காக (ஏ  ஊஹலனோ,  http://www.youtube.com/watch?v=nZIN6ZXdF9o) கொடுத்தது. மிக அற்புதமான அனுபவம் அது. அப்புறம் விசாரித்தால் தான் தெரிகிறது எப்படி நம்மூரில் ராஜாவுக்கு ஒரு உயரிய இடமுண்டோ அதே அளவில் ஆந்திரத்திலும் ஒரு சிம்மாசனம் உண்டென்பது. அவரை பிரியமாய் நாம் இங்கே இசை ஞானி என்று அழைப்பது போல் ஸ்வரராஜா என்று அழைக்கின்றனர். ஆந்திரா மக்கள்  ராஜாவை அவர்களில் ஒருவராகவும் (மனவாடு ) அவரை  அந்திரபிரதேசத்துக்காரர் என்றும்  பெருமை பட்டுக்கொண்டிருந்ததும் தெரிய வந்தது.  இசைக்கு மொழி/நாடு/இனம் என்று  உண்டா என்ன?.அவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது தானே!.  சூப்பர் ஹிட் அடித்த பல தெலுங்கு மொழி பாடல்களை  அவர் தமிழில் மறு உருவாக்கம் செய்யவே இல்லை. உதாரணமாக கில்லெர் படத்தில் இடம்பெற்ற "பிரியா ப்ரியதமா ராகாலு" என்ற மனோ பாடிய பிரமாதமான பாடலை சொல்லலாம்.  பாரதிராஜா "கடலோரக் கவிதைகள்" படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும்  சுகாஷினி நடிக்க "ஆராதனா" என்ற பெயரில் எடுத்தார். "அடி ஆத்தாடி" பாடலை தெலுங்கில் " "அரே ஏமாய்ந்தி" என்று ராஜா கொடுத்திருப்பார். அந்த படம் வந்த போது  இந்த பாடலின் மாயப்பிடியில் ஆந்திரம் மொத்தமும்  கிறங்கிக் கிடந்தது. உதாரணமாய் ஒரு சம்பவம் ஒரு சமயம் கச்சேரியில் "அரே ஏமாய்ந்தி" என்று ஜானகி ஆரம்பிக்க எங்கிருந்தோ  ஒரு ரசிகர் ஓடி வந்து அவரின் காலில் நெடுக்க விழுந்து மெய்  சிலிர்த்து அழுதாராம். இளையராஜாவின் இசையில் கார்த்திக் மற்றும் சோபனா நடித்து வெளிவந்த "அபிநந்தனா" என்ற படத்தின் " பிரேமா எந்த மதுரம்" என்ற இந்த பாடல் எனக்கு   மிகவும் பிடித்த பல இளையராஜா இசைஅமைத்த தெலுங்கு பாடல்களில் ஒன்று. கேட்டு மகிழுங்கள் நான் மகிழ்ந்தது போலவே.