Sunday, October 28, 2012

வித்யாசாகர்- ஒரு நல்ல இசைக்கலைஞன்




எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் வித்யாசாகர். வித்யாசாகர் ஒரு வித்தியாசமான; முக்கியமான இசைத்திறமை. எனக்குத் தெரிந்து அவர் இசையமைத்த எல்லா திரையிசைத்  தொகுப்புக்களும் வெற்றி பெற்றவை. அது ஜெய் ஹிந்தாக இருக்கட்டும் ராமன் தேடிய சீதையாக இருக்கட்டும் சந்திரமுகியாக இருக்கட்டும்.பிரமாதமாக இருக்கும் அவரின் மேலோடிக்கள். அவருடைய "மலரே மௌனமா" (கர்ணா) பாடலை இன்றுவரை மறக்க முடியாது. அர்ஜுன் மட்டுமே ஆரம்பக் காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்துள்ளார். அதற்கப்புறம் தில், தூள், மஜா, மதுர, என பல ஹிட் படங்கள். ரொம்ப நாளைக்கப்புறம் சிறுத்தை, காவலன் என்று வந்து ஹிட் கொடுத்து விட்டு மறுபடியும் மலையாளத்துக்கு எஸ்கேப். இப்போது அவரை தமிழ் பக்கம் அதிகமாக பார்க்கவே முடிவதில்லை. மலையாளப் படங்களில் கலக்கிக்  கொண்டிருக்கிறார். "Diamond Necklace" என்ற லால் ஜோஸ் இயக்கி பாஹாத் பாசில் நடித்த படத்தில் இடம்பெற்ற  இந்த "நிலா மலரே" என்ற பாடலை கேட்காமல் எனது சமீத்திய நாட்கள் கழிவதில்லை.  நிவாஸ்(a) ஸ்ரீனிவாசன் ரகுநாதன் (http://singersrini.com/index.html) என்கிற பாடகர் பாடியுள்ளார்; என்ன அருமையான ரீங்காரம். ஏர்டெல்  சூப்பர் சிங்கேரில் சீசன் 3ல் பாடியுள்ளதாக கேள்வி.  நல்ல எதிர்காலம் உண்டு. யார் கண்டார்கள், பெயரில் நிவாஸ்-ஐ கொண்டிருப்பதாலேயே PB ஸ்ரீநிவாஸ் போலக் கூட ஆகலாம். வாழ்த்துக்கள். Fahadh  Fazil, டைரக்டர் பாசிலின் (காதலுக்கு மரியாதை, அரங்கேற்ற வேலை, வருஷம் 16) மகன். நல்ல அசத்தலான திறமையும் எளிமையும் ஒருங்கே அமைந்த  எனக்கு மிகவும் பிடித்த நடிகன். கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவான். அருமையான படம் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் நேரமிருந்தால் விமர்சனம் எழுதலாம் என்றிருக்கிறேன்!. பார்க்கலாம்.





எனக்குப்  பிடித்த 10 வித்யாசாகர் பாடல்கள் (தரவரிசை அல்ல) பின் வருமாறு, 

1. காற்றின் மொழி (பல்ராம், மொழி). 
2. பொய் சொல்லக் கூடாது காதலி( ஹிஹரன், சாதனா சர்கம். ரன்).
3. பூவாசம் (சாதனா சர்கம், ஸ்ரீராம் பார்த்தசாரதி (அ ) விஜய் பிரகாஷ்,  அன்பே சிவம்).
4. கொஞ்ச நேரம் (ஆஷா போன்ஸ்லே, மது பாலகிருஷ்ணன், சந்திரமுகி)
5. நீயா பேசியது (ஷங்கர் மகாதேவன், திருமலை)
6. அழகூரில்  பூத்தவளே (SPB, சுஜாதா மோகன், திருமலை)
7. நான் மொழி அறிந்தேன் (சுரேஷ் வட்கர், கண்டேன் காதலை)
8. இப்பவே இப்பவே (ஹரிணி, மது பாலகிருஷ்ணன், ராமன் தேடிய சீதை)
9.  ல ள ல இனியவளே (SPB, பொய்) 
10. அடி தோழி அடி தோழி (கல்யாணி, தென்றல்).


இந்தப்  பாடல்களை பின்வரும் வலைத்தளத்தில் Jukebox-ல் கேட்டு மகிழவும். http://www.paadal.com/composer/vidyasagar (அகர வரிசைப்படி அணைத்துப் படங்களும்). இந்த பாடல்.காம் ( http://www.paadal.com/ ) தமிழ்ப் படப் பாடல்களுக்கான ஒரு மிகச்சிறந்ததொரு  வலைத்தளம். எல்லாவற்றையும் நீங்கள் இங்கே பெறலாம். 

தங்கர் பச்சானின் தென்றல் படத்தில் இடம்பெற்ற "அடித் தோழி" என்ற இந்தப் பாட்டு  எப்போதும் கேட்ட மாத்திரத்தில் மனசு லேசாகிவிடும்.  எனக்கு ஒரு டைரக்டர் ஆகவேண்டுமென்பது நெடுநாள் கனவு. ஒருவேளை தப்பித்தவறி ஆகிவிட்டால் நான் பணி  புரிய விரும்பும் இசையமைப்பளர்களில் (ராஜா, ரெஹ்மான், யுவன், மணி ஷர்மா, ஹாரிஸ், தேவிஸ்ரீ உள்ளிட்ட பட்டியலில்) கண்டிப்பாக வித்யாசாகருக்கு இடம் உண்டு. பயப்படாதீர்கள் நான் திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு எப்படி எனில் ஒரு சுருள் முடிகொண்ட சீனாக்காரனையோ; சீனக்காரியையோ  (Curly Haired Chinese) பார்ப்பதற்கு ஒப்பானது. கண்டிப்பாக நடக்காது/பார்க்க முடியாது . எப்படியோ, வித்யாசாகர் இன்னும் பல  நல்ல பாடல்களை தருவார், கண்டிப்பாக.    

Tuesday, October 16, 2012

இலையுதிர்க்காலக்  குறிப்புகள் 





மரங்கள் நாம்    


உதிர்ந்த இலைகளில் நான்  
உன்னைப் பார்க்கிறேன்-நீ என்னைப் பார்க்கிறாய் .
ஆனால் உதிர்ந்துக்  கிடப்பது என்னவோ நமது உறவு தானே!

உண்மையில் நீயும் நானும் சலனமற்று அடுத்த வசந்தத்தை   
எதிர்நோக்கி நிற்கும் பின் நவீனத்துவ மரங்கள்.
இது நான் சொன்னது!

நீ சொன்னாய்;
உதிர்ப்பதும் புதியதாய் உடுத்திக்கொள்வதும்  நமக்கு இயல்புதானே; 
நாம் ஒன்றும் நீ சொல்வதுபோல் பின் நவீனத்துவ மரங்கள் இல்லை.
மரங்கள்!.
இயற்கையோடு இசைந்து வாழும் மரங்கள்!. 
காலம் கனிந்த பின்; 
உறவின்  பசுமை வெளிரியப் பின்,
உதிர்ப்பது உலக நியதி தானே!.

எனவே நாம் மரங்கள். இயல்பு மாறா மரங்கள்; 
எல்லா  மரங்களைப்  போலவும். 

*********************************************************************************





உதிர்த்தல் 


சில மரங்கள்
இலையுதிர்க்காலத்தின் அறிகுறிகள் தென் பட்டதுமே
வெட்கி
முகம் சிவந்து
மூப்படைந்து
இலையுதிர்த்து
இளம் வயது பெண் புத்த பிக்குகள் போல துறவு பூள்கின்றன !

சில மரங்கள்,
இலையுதிர்க்காலம், நான் வந்தது தெரியவில்லையா?.
உன் இலைகளைக் களை
என்று கொஞ்சலாய் சொல்லி பார்த்தாலும்;
இல்லை, நான் முடியப்போகிறேன்;  சீக்கிரம் உதிர்க்கிறாயா? இல்லையா?? என்று மிரட்டிப்பார்த்தாலும்;
இலையை உதிர்க்க மனமே இல்லாமல்,
குறைச்சம்பள நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவன்
தன் வாடகைக்குக்  குடியிருக்கும் வீட்டுக்குச்  சொந்தக்காரனிடம் வாடகையை  இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என்று போக்கு காட்டுவானே- அது போல கண்ணாமூச்சி ஆடிகொண்டிருக்கின்றன!

*******************************************************************************




மேப்பிள்ளன்னை அளித்த ஞானம்   (Wisdom from Mother Maple) 


வீட்டின் முன் நின்று
பச்சை சிவப்பு மஞ்சள் வண்ணங்களிலான இலைகளைச்  சூடி நின்ற இரண்டு மேப்பிள் மரங்களுடன் புகைப்படம் எடுக்க நினைத்தேன்.
நேரம் அமையவே இல்லை.
நாளை நாளை என்று நாட்கள் கழிந்தன. - ஆனால் ஒரு வாரத்திற்குள்
என் வீட்டு மேப்பிள்ளன்னை இலைகளை உதிர்த்துவிட்டு
துறவு பூண்டு விட்டாள்
அவளை நான் என்னென்பது!- அன்னையாயிற்றே!

இப்படித்தான் கழிகிறது
வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கான திட்டமிடுதலும்
நாளை நாளை என்று!

என்று தான் வாழப் போகிறானோ அல்லது
இப்படியே வாழ்ந்துவிட்டு
தோச்தொவேச்கி (Dostoevesky) இந்த  முழுமையற்ற தன்மையைத்தான்  வாழ்க்கை என்று சொன்னான் என்று அவன் புராணம் பாடப்   போகிறேனோ  தெரியவில்லை!

வாழ்க்கை என்று சொல்வார்களே
அதன் பின்னோ ஓடுகின்றேனோ? - அல்லது,
அது   துரத்திகொன்டிருப்பதால் ஓடுகின்றேனோ?
விடை தெரியவில்லை.
அடுத்த இலையுதிர்காலத்திற்குள் கண்டு பிடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்!

*******************************************************************************

நன்றி !

ப்ரியங்களுடன்,
அருண்